உத்தரப் பிரதேச மாநிலம் சம்டா கிராமத்தில், 15 வயது பள்ளி மாணவியைக் கொடூரமாகக் கொலை செய்து, அவரது உடலைத் தோளில் சுமந்து சென்ற 19 வயது இளைஞன் தரம்பால் சவுகானுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. 2024 டிசம்பரில் நடந்த இந்த அதிர்ச்சிகரமான வழக்கில், மாவட்ட நீதிபதி உத்கர்ஷ் சதுர்வேதி இந்த அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளார்.
சம்பவத்தன்று, பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த மாணவியை வழிமறித்த தரம்பால், ஒருதலைக் காதலால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கத்தியால் அவர் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். பின்னர், இரத்தம் சொட்டச் சொட்ட மாணவியின் உடலைத் தோளில் சுமந்தபடி கிராமம் முழுவதும் வலம் வந்துள்ளார். இந்தக் கொடூரக் காட்சியைக் கண்ட சக பள்ளி மாணவிகளும் கிராம மக்களும் அச்சத்தில் உறைந்தனர். ஒன்பது சாட்சிகளிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் வலுவான ஆதாரங்களின் அடிப்படையில், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையுடன் ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
