டாக்டர் காந்தராஜ், சினிமா விமர்சகராக பல விஷயங்களை தமிழ் சினிமா ரசிகர்களோடு தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். இன்று எம்ஜிஆர் நினைவுநாளையொட்டி அவர் ஒரு நேர்காணலில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, இன்று எம்ஜிஆர் நினைவு நாள் என்று கூறுகின்றனர். ஆனால் அவர் உண்மையில் இறந்தது 23ம் தேதி மதியம் 2 மணிக்கு தான். ஆனால் அந்த தகவலை உடனடியாக வெளியிடாமல் மறைத்துவிட்டனர். அடுத்தநாள் காலையில்தான் முறைப்படி வெளியிட்டனர். இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. 23ம் தேதி இரவு 12 மணிக்கு நாவலர் நெடுஞ்செழியன் தற்காலிக முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். 24ம் தேதி காலையில்தான் அனைவருக்கும் எம்ஜிஆர் மறைந்த விஷயம் தெரிவிக்கப்பட்டது.
நான் அப்போது 1987ம் ஆண்டில் கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்தேன். அப்போது சென்னை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து உடலை பதப்படுத்தும் டாக்டர்கள் சிலர் ராமாவரம் தோட்டத்துக்கு வந்திருந்தனர். பெரிய பெரிய மருத்துவ வாகனங்களும் தோட்டத்தில் நின்றிருந்தன. அப்போதே நான் என் அண்ணனிடம், தோட்டத்துல ஏதோ தப்பா தெரியுது என்று சந்தேகமாக கூறினேன். என் அண்ணா அப்போது எம்ஜிஆர் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார். அப்படி எல்லாம் எதுவும் இல்லை என்று கூறிவிட்டு சென்றார். மறுநாள் காலை 4 மணிக்கு எம்ஜிஆர் மறைவு தகவல் வந்த போதுதான் நீ நேற்றே சொன்னது உண்மைதானோ என்னவென்று தெரியலையே என்று கூறிவிட்டுச் சென்றார்.
ஜெயலலிதா மரணத்தை விட எம்ஜிஆர் மரணத்தில் நிறைய மர்மங்கள் இருக்கிறது. ஆனால், அவர் இயற்கையாக தான் இறந்தார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவர் இறந்தது 23ம் தேதி மதியம்தான். ஆனால், 24ம் தேதிதான் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதற்கான காரணம்தான் தெரியவில்லை. அதுவும் ராமாவரம் பங்களாவில் இருந்த சில போலீஸ்காரர்கள் சந்தேகப்பட்டு. ஐஜி அலுவலகதத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பின்பு ஐஜி ராமாவரம் பங்களாவுக்கு வந்த பின்புதான் உண்மைையே வெளியே வந்தது. கடைசி நேரத்தில் எம்ஜிஆருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அப்போதே மருத்துவமனைக்கு போய்விடலாம் என அங்கிருந்த டாக்டர்கள் கூறினர். ஆனால் எம்ஜிஆர் மறுக்கிறார். அதன்விளைவாகவே அவர் இறந்துவிடுகிறார். டிசம்பர் 24ம் தேதி கிறிஸ்துமஸ் விழா நாள் என்றும், பெரியார் நினைவு நாள் என்றும் பல காரணங்களை கூறி, டிசம்பர் 24 தான் எம்ஜிஆர் மறைந்த நாள் என்று அறிவித்து விட்டனர். ஆனால், அவர் மறைந்தது டிசம்பர் 23 மதியம் என்பதுதான் உண்மை என்று கூறியிருக்கிறார் டாக்டர் காந்தராஜ்.