தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் மற்றும் போதைக் கலாச்சாரம் அதிகரித்துள்ளதாகத் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சேலத்தில் நேற்று (ஏப். 15) நடைபெற்ற திமுக கூட்டணி பொதுக்கூட்டத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையிலேயே அவர் இதைக் குறிப்பிட்டது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரண்டு விவகாரங்களைத் தவிர, தற்போதைய ஆட்சியைப் பற்றிக் குறை சொல்ல வேறு ஏதுமில்லை என்றும் அவர் அந்த மேடையில் பேசியுள்ளார்.
இருப்பினும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தைச் சாதாரணமான குறையாக அவர் குறிப்பிட்ட விதம் தற்போது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. ஒரு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு தொடர்பான மிக முக்கியமான பிரச்சினைகளை ‘இதைத் தவிர வேறு குறை இல்லை’ என்று அவர் சுருக்கியது, குற்றங்களைச் சாதாரணமாகக் கடந்து செல்வது போல் இருப்பதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். எதிர்க்கட்சிகளும் பிரேமலதாவின் இந்தப் பேச்சுக்குத் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
