தமிழக அரசியலில் நிலவி வரும் கூட்டணி விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை அதிரடியான விளக்கத்தை அளித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் தரப்பில் யாரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்த அவர், கொள்கை ரீதியாக ஒன்றிணைந்துள்ள ‘இந்தியா’ (INDIA) கூட்டணியை யாராலும் சிதைக்க முடியாது என்று உறுதியாகக் கூறினார். மாணிக்கம் தாகூர், ஜோதிமணி போன்ற காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தவெக குறித்து தெரிவித்த கருத்துகள் பேசுபொருளான நிலையில், அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக வெளியான தகவல்களை செல்வப்பெருந்தகை இதன் மூலம் மறுத்துள்ளார்.
தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் வியூகங்களைக் கடுமையாகச் சாடிய செல்வப்பெருந்தகை, ‘இந்தியா’ கூட்டணியில் இருந்து ஒவ்வொரு கட்சியாக வெளியே கொண்டு வந்து கூட்டணியை உடைக்க வேண்டும் என்ற ஈபிஎஸ்-ஸின் கனவு ஒருபோதும் பலிக்காது என்று தெரிவித்தார். தற்போதைய சூழலில் கூட்டணிக் கட்சிகளிடையே பலமான புரிதல் இருப்பதாகவும், அரசியல் லாபங்களுக்காகக் கொள்கை உறவுகளை விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்றும் அவர் வலியுறுத்தினார். வரும் தேர்தலை நோக்கிய நகர்வுகளில் காங்கிரஸ் தனது தற்போதைய கூட்டணிக் கட்டமைப்பிலேயே உறுதியாக இருப்பதை இவரது பேச்சு தெளிவுபடுத்தியுள்ளது.
