மகாராஷ்டிர மூத்த காங்கிரஸ் தலைவரான நானா படோலேவின் கால்களை, குரு பூர்ணிமா விழாவின் போது அவருடைய ஆதரவாளர்கள் பாலாலும் தண்ணீராலும் கழுவும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், படோலே நாற்காலியில் அமர்ந்து மொபைல் போனைப் பார்த்துக் கொண்டிருக்க, அவரது ஆதரவாளர்கள் இருவர் அவரது கால்களைக் கழுவி, மலர்களைத் தூவி மரியாதை செய்வது போல் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இந்த வீடியோ வெளியானது முதல் பாரதிய ஜனதா கட்சி காங்கிரஸைக் கடுமையாக விமர்சித்து வருகிறது. இதுதான் “காங்கிரஸ் கட்சியின் கலாச்சாரம்” மற்றும் அவர்களின் தலைவர்களின் அகந்தையைக் காட்டுகிறது என்று பாஜக அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் சாடியுள்ளனர். தலைவர்களின் கால்களை தொண்டர்கள் கழுவுவது போன்ற செயல்கள் அரசியல் பண்பாட்டிற்கு உகந்தது அல்ல என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த நானா படோலே, பொதுவாக தான் இதுபோன்ற செயல்களை ஊக்குவிப்பது இல்லை என்றும், ஆனால் குரு பூர்ணிமா நாளில் தனது குடும்பத்தினரை போன்ற இளைய ஆதரவாளர்கள் அன்பின் காரணமாக வற்புறுத்தி மரியாதை செய்ததால் மறுக்க முடியவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார். மேலும், தனது தொண்டர்களின் அன்பான மரியாதையை வைத்து பாஜக கலாச்சாரத்தைப் பற்றி பேச வேண்டியதில்லை என்றும் அவர் பதிலடி கொடுத்துள்ளார்.
