தமிழக வெற்றிக் கழக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தந்தது தாங்கள் சுயமாக எடுத்த முடிவு என்றும், இதில் எந்தவிதக் கட்டாயமோ அல்லது அழுத்தமோ இல்லை என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். மேலும், தாங்கள் எந்தவொரு கூட்டணியிலும் அங்கமாக இல்லை என்பதைத் தெளிவுபடுத்திய அவர், தமிழ்நாட்டில் தவெகவின் நல்லாட்சி தொடரும் பட்சத்தில் தங்களது ஆதரவும் தொடர்ந்து நீடிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
சட்டப்பேரவை விவாதம் குறித்துப் பேசிய வீரபாண்டியன், “நாங்கள் தவெக அரசுக்கு ஆதரவளிக்காமல் இருந்திருந்தால் கடந்த மே 10-ஆம் தேதியன்று புதிய அரசு பதவியேற்றிருக்காது; மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்திருக்கும்” என்று சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்நாட்டில் அத்தகைய அசாதாரண அரசியல் சூழல் ஏற்படுவதைத் தடுக்கவே, ஜனநாயக ரீதியாக மக்கள் தீர்ப்பை மதித்து இந்த ஆதரவை வழங்கியதாக அவர் விளக்கமளித்துள்ளார்.
