தமிழ் சினிமாவை பொறுத்த வரையில் ஒரு படம் வெற்றி பெற கதாநாயகருக்கு எவ்வளவு முக்கியத்துவம் உண்டோ அதனைப் போலவே காமெடி நடிகருக்கு முக்கியத்துவம் உண்டு. பல படங்களில் நடிகர்களின் காமெடிகள் படத்தை தூக்கி நிறுத்தியுள்ளது. அப்படி தமிழ் சினிமாவில் நாகேஷ் தொடங்கி வடிவேலு வரை ஏராளமான காமெடி நடிகர்கள் கலக்கியுள்ளனர். ஆனால் அப்படி காமெடியில் கலக்கிய நடிகர்களில் ஒரு சிலர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். சிலர் திரைப்படங்களில் வெற்றி பெற்றாலும் சில படங்களுக்கு பிறகும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகும் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டனர். அவர்களில் ஒருவர்தான் காமெடி நடிகர் கிரேன் மனோகர். தமிழ் திரைப்படங்களில் பெரும்பாலும் நகைச்சுவை வேடங்களில் இவர் நடித்துள்ளார்.
இவர் தொடக்க காலத்தில் படங்களுக்கு கிரேன் தொழில்நுட்ப பணியாளராக பணியாற்றினார். அதன் பிறகு நடிக்க தொடங்கிய போது மனோகர் என்ற தன்னுடைய பெயருடன் கிரேன் என சேர்த்துக்கொண்டார். பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடிப்பதற்கு முன்னதாக கே எஸ் ரவிக்குமாரின் பல படங்களில் நடித்து தனது வாழ்க்கையை தொடங்கினார். முதல் முதலில் 1993 ஆம் ஆண்டு ஒரு மலையாள திரைப்படத்தில் இவர் நடிகராக அறிமுகமானார். அதன்பிறகு 1994 ஆம் ஆண்டு நாட்டாமை திரைப்படம் மூலமாகத்தான் இவர் தமிழ் சினிமாவில் நுழைந்தார்.

இந்த திரைப்படத்தில் இவருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அடுத்தடுத்து முத்து, பெரிய குடும்பம், தர்மசக்கரம், நட்புக்காக, தேசிய கீதம், நீ வருவாய் என, பாட்டாளி, சமுத்திரம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். குறிப்பாக இவர் வடிவேலுவுடன் இணைந்து பெரும்பாலான திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் கலக்கியுள்ளார். இவருடைய நடிப்பு ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களுக்கும் பிடித்து போக தமிழ் சினிமாவில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் முன்னணி காமெடி நடிகராக ஒரு கலக்கு கலக்கினார்.

இப்படி தமிழ் சினிமாவில் காமெடியில் கலக்கிக் கொண்டிருந்த இவர் வடிவேலு ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து காணாமல் போக இவருக்கும் பட வாய்ப்புகள் அப்படியே குறைந்துவிட்டது. அதனால் கிடைத்த படங்களில் எல்லாம் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். இறுதியாக கடந்த 2020 ஆம் ஆண்டு பொன்மகள் வந்தால் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படியான நிலையில் கிரேன் மனோகர் சமீபத்தில் அளித்த பேட்டியில், இன்று ஒரு காமெடி நடிகர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளத்தை எங்களால் 100 படங்களில் நடித்தாலும் வாங்க முடிவதில்லை. அதன் காரணமாகவே எங்களைப் போன்ற காமெடி நடிகர்களின் குடும்பம் ஏழ்மையில் தத்தளிப்பதாக கிரேன் மனோகர் மனவேதனையுடன் தெரிவித்துள்ளார்.
