சென்னை முகப்பேர் மேற்கு பகுதியை சேர்ந்த 19 வயதுடைய பெண் ஒருவர் அதே பகுதியில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். மாணவியின் வீட்டின் அருகில் வசித்து வரும் 20 வயதுடைய ஷியாம் சுந்தர் என்பவர் சட்டக் கல்லூரி படித்து வரும் நிலையில் மாணவியை கடந்த சில வருடங்களாக ஒருதலை பட்சமாக காதலித்து வந்துள்ளார். இதனால் மாணவியை தினந்தோறும் கல்லூரிக்கு செல்லும் போது பின் தொடர்ந்து தன்னை காதலிக்குமாறு தொல்லை கொடுத்துள்ளார்.
இதனை அறிந்த மனைவியின் பெற்றோர் வாலிபரை கண்டித்துள்ளனர். இருந்தாலும் ஷியாம் மாணவியை பின்தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்ததால் மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இது குறித்து விசாரணை செய்து காவல்துறையினர் மாணவனை எச்சரித்து அனுப்பினர். இந்நிலையில் நேற்று மாணவி வழக்கம் போல கல்லூரிக்கு செல்லும்போது காரில் வந்த ஷியாம் சுந்தர் அவரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்திச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு இது குறித்து தகவல் அறிந்த மாணவியின் தாயார் போலீசில் புகார் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி டோல்கேட் அருகே வைத்து காரை மடக்கிப்பிடித்து மாணவியை மீட்டதுடன் கடத்திச் சென்ற மாணவனையும் போலீசார் கைது செய்தனர். மேலும் காரில் மாணவருடன் சென்ற மற்றொரு பெண்ணையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
