திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை சித்தூர் பகுதியைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி. இவர் நத்தத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் இறுதி ஆண்டு படித்து வந்தார். இவரும் நந்தகுமார் என்பவரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். நந்தகுமார் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறையில் வீட்டிற்கு வந்த புவனேஸ்வரி ஸ்பெஷல் ட்ரைனிங் இருப்பதால் கல்லூரிக்கு செல்ல வேண்டும் எனக் கூறி சென்றார்.
ஆனால் கல்லூரிக்கு போகாமல் நந்தகுமாருடன் காரில் பழனிக்கு சென்று அங்குள்ள லாட்ஜில் ரூம் எடுத்து தங்கி உள்ளனர். பின்னர் திங்கட்கிழமை காலை 7 மணிக்குள் வகுப்பறையில் இருக்க வேண்டும் என்பதால் நந்தகுமார் அவசர அவசரமாக புவனேஸ்வரியை அழைத்துக் கொண்டு கிளம்பியுள்ளார்.
அவர்கள் சத்திரப்பட்டி மாட்டு பாதை பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த புவனேஸ்வரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நந்த குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
