சென்னை அடையாறு ராமசாமி கார்டனை சேர்ந்த நாகராஜன் என்ற தச்சு தொழிலாளிக்கு ஹரிஹரன் என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். ஹரிஹரன் (18) சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டிப்ளமோ இன்ஜினியரிங் படித்து வருகின்றார். இவர் தனது தந்தையிடம் மோட்டார் சைக்கிள் வாங்கித் தருமாறு அடம் பிடித்துள்ளார். ஆனால் மகனின் வயதை காரணம் காட்டி நாகராஜன், மோட்டார் சைக்கிளை வாங்கிக் கொடுக்காமல் காலதாமதம் செய்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹரிகரன் தன்னுடைய தந்தைக்கு தெரியாமல் அவருடைய மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றுள்ளார்.
அப்போது கவனக்குறைவால் மோட்டார் சைக்கிளில் இருந்து அவர் கீழே விழுந்துள்ளார். இதில் உடலில் ஏற்பட்ட காயங்களை பார்த்த தந்தை மகனை கண்டித்துள்ளார். இதனால் மனமடைந்த ஹரிகரன் நேற்று முன்தினம் இரவு வீட்டின் அறையில் யாரும் இல்லாத சமயத்தில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.. உடனே இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஹரிஹரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
