தமிழக ஊராக வாழ்வாதார இயக்கம் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு திட்டத்தின் கீழ் கடன் வழங்கி குழு உறுப்பினர்களுடைய வாழ்வாதாரம் மேம்படுவதற்கு வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கிறது. பிணையம் இல்லாமல் 75 ஆயிரம் முதல் 10 லட்சம் வரை வேளாண் சார்ந்த உணவு பதப்படுத்தும் தொழில்கள் ,பண்ணை சாரா தொழில்கள், உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு கடன் உத்திரவாத திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்பட்டு வருகிறது. கடன் தொகையை தவணை தவறாமல் உரிய காலத்திற்குள் திருப்பி செலுத்தும் பெண் தொழில் முனைவோருக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை நிலுவையில் உள்ள கடன்களுக்கான வட்டியில் 2% மானியமாக கொடுக்கப்படுகிறது.
சுய உதவி குழு உறுப்பினர்களுக்காக வங்கிகள் பிரத்தியேகமாக கடன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் இணைந்திருக்கும் சுய உதவி குழுவில் உள்ள அனைத்து தகுதியான உறுப்பினர்களும் இந்த திட்டத்தின் கீழ் கடன் பெற அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் அல்லது கடன் கணக்கு வைத்திருக்கும் வங்கி கிளையை அணுகி விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
