கரூரில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய், லஞ்ச ஊழலுக்கு எதிராகத் தனது தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் அதிரடி வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தார். “உங்ககிட்ட யாராவது லஞ்சம் கேட்டாங்கன்னா, கொடுக்க முடியாதுன்னு சொல்லுங்க, நான் இருக்கேன் உங்களோட” என்று அவர் மேடையில் கர்ஜித்தார். யாராவது வற்புறுத்தினால் “இது எங்க விஜய் ஆட்சி” என்று தைரியமாகச் சொல்லுங்கள் என அவர் பேசி முடித்த சில மணி நேரங்களிலேயே, தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் அரசு அதிகாரி ஒருவர் லஞ்சம் வாங்கி பிடிபட்ட சம்பவம் அரசு அலுவலகங்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பிரானூர் பகுதியைச் சேர்ந்த 52 வயதான மாடசாமி என்பவர், தனது மனைவி ஆறுமுகத்தம்மாள் பெயரில் 2.28 சென்ட் நிலத்தையும் ஒரு வீட்டையும் வாங்கியுள்ளார். அந்தச் சொத்து கூட்டு பட்டாவில் இருந்ததால், பிற்காலத்தில் சட்ட சிக்கல்கள் வரக்கூடாது என்பதற்காக அதைத் தனிப்பட்டாவாக மாற்ற அவர் திட்டமிட்டார். இதற்காக செங்கோட்டை வட்டார நில அளவை அலுவலகத்தை நாடி, அங்கு பணிபுரிந்து வந்த 37 வயதான சர்வேயர் ராமர்செல்வத்தை அணுகி, நிலத்தை முறைப்படி அளவீடு செய்து தனிப்பட்டா வழங்குமாறு கோரியுள்ளார். ஆனால் சர்வேயரோ, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தந்தால்தான் வேலை நடக்கும் என்று அலட்சியமாகக் கூறியுள்ளார்.
கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை லஞ்சமாகக் கொடுக்க விரும்பாத மாடசாமி, இதுகுறித்து நெல்லை மண்டல லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில், அதிகாரிகளின் ஆலோசனையின்படி ரசாயனம் தடவப்பட்ட 10 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாடசாமி சர்வேயர் ராமர்செல்வத்திடம் கொடுத்தார். அப்போது சாதாரண உடையில் அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், சர்வேயரைச் சுற்றி வளைத்து கையும் களவுமாகப் பிடித்தனர். எதிர்பாராத இந்தச் சோதனையால் நிலைகுலைந்து போன சர்வேயரை உடனடியாகக் கைது செய்த போலீசார், அவரிடமிருந்த லஞ்சப் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
“மக்களே, நீங்க கூட இருக்கும்போது லஞ்ச ஊழல் மட்டும் இல்ல, அதிகாரத்தை வச்சு ஆட்டம் போடுற யாரா இருந்தாலும் அடங்கிருவாங்க” என்று லஞ்சத்திற்கு எதிராக முதலமைச்சர் விஜய் காலையில் மேடையில் முழங்கிய நிலையில், மதியத்திற்குள் செங்கோட்டையில் இந்த லஞ்சப் புகார் வெடித்து, அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளது மக்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறையின் இந்த அதிரடி நடவடிக்கை, தென்காசி மாவட்டத்தின் ஒட்டுமொத்த அரசுத் துறை வட்டாரங்களையும் நிலைகுலையச் செய்துள்ளது.
