நடிகர் சியான் விக்ரம், இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். அவரது தங்கலான் படத்தை ரசிகர்கள் மிக ஆவலாக எதிர்பார்த்து இருக்கின்றனர். நடிகர் தியாகராஜன், தமிழ் சினிமாவில் கடந்த 1980களில் முன்னணி நடிகராக இருந்தவர். அவரது மகன்தான் பிரசாந்த். வைகாசி பொறந்தாச்சு படத்தில் அறிமுகமான அவர் ஜீன்ஸ் போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்தார். ஆனால், ஒரு கட்டத்துக்கு பிறகு படவாய்ப்புகளை இழந்த அவர், நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது, வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் 68 படத்தில் பிரசாந்த் நடிக்கிறார்.
இந்நிலையில் பிரசாந்தின் அப்பா தியாகராஜனும், விக்ரமின் அம்மாவும் சொந்த அண்ணன், தங்கை என்ற உறவுமுறை என்பது தெரிய வந்துள்ளது. விக்ரம், தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வந்த காலகட்டத்தில் சொந்த தாய் மாமாவான தியாகராஜன், பிரசாந்த் ஆகியோர் சியான் விக்ரமுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. அதே வேளையில், விக்ரமை அவர்கள் கேவலமாக திட்டிய விஷயத்தை, மறைமுகமாக இயக்குநர் பாலா எழுதிய இவன்தான் பாலா நூலிலும் குறிப்பிட்டு இருக்கிறார்.
அத்தை மகன், மாமன் மகன் என விக்ரம், பிரசாந்த் இவ்வளவு நெருக்கமாக உறவினர்களாக இருந்தும், விக்ரம் பிரசாந்த் இருவரும் சினிமா துறையில் இருந்தும் இப்படி பிரிந்திருக்க காரணம், விக்ரம் வீட்டில் நடந்த காதல் திருமணம்தான் காரணம் என இயக்குநர் ராசி அழகப்பன் கூறி இருக்கிறார். விக்ரம் கூட காதல் திருமணம்தான் செய்திருக்கிறார். அதுகூட காரணமாக இருக்கலாம்.
ஒருவேளை விக்ரம், சினிமாவுக்கு வந்தால் தன் மகனின் சினிமா வாழ்க்கைக்கு போட்டியாக விக்ரம் வந்துவிடுவாரோ என்று கூட நினைத்திருக்கலாம். எப்படி இருந்தாலும், தியாகராஜன் நினைத்திருந்தால் ஆரம்ப காலத்தில், விக்ரமுக்கு உதவி இருக்கலாம். ஆனால், இன்று சினிமாவில் முன்னேறி, விக்ரம் மிகப்பெரிய டாப் ஹீரோவாக வலம் வருகிறார். பிரசாந்த் – விக்ரம் குறித்த இந்த தகவல், ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.