ஆந்திர மாநிலம் அம்பேத்கர் கோணசீமா மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி திடீரென்று வகுப்பறையில் சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமச்சந்திராபுரம் நகரில் உள்ள தனியார் பள்ளியில் பாசலாபுடி கிராமத்தை சேர்ந்த மாணவி படித்து வருகின்றார். அவர் கடந்த வியாழக்கிழமை அன்று வகுப்பறையில் திடீரென்று மயக்கமடைந்து விழுந்துள்ளார். இதனைக் கண்டு பதறிப் போன ஆசிரியர் உடனே பள்ளி ஊழியர்கள் உதவியுடன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ஆரம்பகட்ட மருத்துவ அறிக்கையின் படி அந்த மாணவி மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இருந்தாலும் மரணத்திற்கான சரியான காரணம் குறித்து பிரேத பரிசோதனைக்கு பிறகு தெரியவரும். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிக்குச் சென்ற மகள் பிணமாக வீட்டுக்கு திரும்பி வந்த செய்தி பெற்றோர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
