“பாமக-வுக்கு ஓட்டு போடாதீங்க…தந்தையாக நான் செத்துவிட்டேன்!” தேர்தல் களத்தில் வெடித்த தந்தை – மகன் போர்…!!

By Devi Ramu on சித்திரை 21, 2026

Spread the love

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணியின் துரோகத்தை முறியடிக்குமாறு பாட்டாளி சொந்தங்களுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தனது கொள்கைகளைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு, அன்புமணி அரசியலை வியாபாரமாக்கிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், மாம்பழம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், மறைந்த முதல்வர் கலைஞர் அவர்களை முதலமைச்சர் ஸ்டாலின் இறுதிவரை கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொண்டதைச் சுட்டிக்காட்டிய ராமதாஸ், தனக்கு வாய்த்த மகனோ தான் உயிரோடு இருக்கும்போதே துரோகம் செய்வதாகக் கண்ணீர் மல்கக் குறிப்பிட்டுள்ளார்.

அன்புமணி போட்டியிடும் மற்றும் ஆதரவு தரும் 18 தொகுதிகளிலும் அவரது அணியினரைத் தோற்கடிக்கச் செய்ய வேண்டும் என்றும், துரோகம் ஒருபோதும் வெற்றி பெறக்கூடாது என்றும் அவர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். தற்போது ராமதாஸ், சசிகலாவுடன் கூட்டணி அமைத்துத் தனித்துப் போட்டியிடும் சூழலில், மகனுக்கு எதிராகவே அவர் விடுத்துள்ள இந்த அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “என் ரத்தமே எனக்கு விஷமானாலும், என் தொண்டர்களே எனக்கு மருந்தாவார்கள்” என அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ள இந்தச் செய்தி, பாமக தொண்டர்களிடையே பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.