சென்னை ராயபுரத்தில், கடந்த 8 வருடங்களாக காதலித்துவிட்டு ஏமாற்றிய காதலனின் திருமணத்தை இளம்பெண் ஒருவர் நேரில் சென்று தடுத்து நிறுத்தி நீதி கேட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்தப் போராட்டத்தின் போது, பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண்ணிற்கு ஆதரவாகப் பேச வந்த நபர் ஒருவரை, சம்பவ இடத்திற்கு வந்த ராயபுரம் காவல் ஆய்வாளர் சிதம்பர பாரதி திடீரென முகத்தில் பலமாக குத்தியதாகக் கூறப்படுகிறது. போலீசாரின் இந்த அத்துமீறிய வன்முறைச் சம்பவம் அங்கிருந்த பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இதனை அறிந்த ராயபுரம் தொகுதியின் தமிழக வெற்றிக் கழக (தவெக) எம்.எல்.ஏ கே.வி.விஜய் தாமு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காவல் ஆய்வாளரின் அராஜகப் போக்கை நேரில் தட்டிக்கேட்டார். “யாரைக் கேட்டுப் பொதுமக்களை அடித்தீர்கள்? பொதுமக்கள் மீது கை வைக்க உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்?” என்று ஆய்வாளர் சிதம்பர பாரதியிடம் எம்.எல்.ஏ தாமு சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினார். இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதமும், தகராறும் ஏற்பட்டதால் அந்தப் பகுதியே பெரும் பதற்றத்திற்கு உள்ளானது.
