ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 3-வது வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி ஆஸ்திரேலியா சென்றுள்ளார். ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டில் இருநாட்டுத் தலைவர்களும் வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உறவை மேலும் மேம்படுத்துவது குறித்து ஆலோசனைகளை மேற்கொண்டனர்.
இந்தச் சூழலில், இருநாடுகளின் யுக்தி சார்ந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஆஸ்திரேலியாவிடம் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த பழங்காலப் பாரம்பரிய சின்னங்கள் மற்றும் கலைப் பொருட்களை இந்தியாவிடம் ஒப்படைக்க ஆஸ்திரேலிய அரசு முன்வந்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டைச் சேர்ந்த நந்தி கல் சிற்பம், பத்ரகாளியின் உருவம் பொறித்த உலோகத்தாலான திரிசூலம் மற்றும் ஆறு முகங்களைக் கொண்ட முருகன் கல் சிலை ஆகியவற்றை இந்தியாவிடம் ஒப்படைக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் இந்த ஆஸ்திரேலியப் பயணத்தின் போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதோடு, இருநாட்டுத் தலைவர்களுக்கிடையே தூதுக்குழு அளவிலான பேச்சுவார்த்தைகளும் வெற்றிகரமாக நடைபெற்றன. இந்த இருதரப்புப் பேச்சுவார்த்தைகளின் முக்கியப் பயனாகத் தமிழகத்தின் தொன்மையான கலாசாரப் பொக்கிஷங்கள் மீண்டும் தாய்நாட்டிற்கு மீட்டுக்கொண்டு வரப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
