மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றத்தைத் தணிக்கவும், அமெரிக்கா – ஈரான் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டு வரவும் சீன அதிபர் ஜி ஜின்பிங் முதன்முறையாக 4 அம்ச அமைதித் திட்டத்தை முன்மொழிந்துள்ளார். அபுதாபி இளவரசர் ஷேக் ஹலேத் பின் முகம்மதுவைச் சந்தித்தபோது இந்த முக்கிய அறிவிப்பை அவர் வெளியிட்டார். ஹார்முஸ் ஜலசந்தியை முற்றுகையிடும் அமெரிக்காவின் முடிவுக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், பிராந்திய நாடுகளின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதே இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
ஈரான் மீதான அணுசக்தி விவகாரத்தில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களால் பெரும் போர் வெடித்தது. பாகிஸ்தானின் இடைவெளியால் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்ட போதிலும், அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதன் விளைவாக, ஈரானைப் பொருளாதார ரீதியாக முடக்க ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா முற்றுகையிட முயன்று வருகிறது. இந்த நெருக்கடியான சூழலில், சீனா தனது திட்டத்தின் மூலம் சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சீனாவின் 4 அம்ச திட்டமானது, நாடுகளுக்கு இடையே அமைதியான உறவை நிலைநாட்டுவது, நிலையான பாதுகாப்பு அமைப்பை உருவாக்குவது, நாடுகளின் இறையாண்மையைப் பாதுகாப்பது மற்றும் ஐக்கிய நாடுகள் சபையை மையமாகக் கொண்ட சர்வதேச ஒழுங்கை உறுதிப்படுத்துவது ஆகியவற்றை வலியுறுத்துகிறது. குறிப்பாக, “பாதுகாப்புடன் கூடிய வளர்ச்சி” என்ற கோட்பாட்டை முன்வைத்துள்ள சீனா, தனது நவீனமயமாக்கல் தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ளவும் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இது பிராந்திய ஒருமைப்பாட்டை மதிக்கத் தவறும் நாடுகளுக்கு விடப்பட்ட மறைமுக எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
வர்த்தக வரி விவகாரத்தில் டிரம்ப் அரசுடன் சீனா ஏற்கனவே மோதல் போக்கைக் கடைப்பிடித்து வரும் சூழலில், இந்தத் திட்டம் சர்வதேச அரசியலில் மிக முக்கியமானது. அடுத்த மாதம் டிரம்ப் சீனாவுக்குச் செல்லவிருக்கும் நிலையில், ஈரானுக்கு ஆதரவாகத் திறந்தவெளியில் நிற்காமல், அதே சமயம் அமெரிக்காவின் தன்னிச்சையான போக்கைக் கண்டிக்கும் வகையில் சீனா காய் நகர்த்தியுள்ளது. இதன் மூலம் மத்திய கிழக்கு நாடுகளில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தவும், அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு செக் வைக்கவும் சீனா முயன்று வருவதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
