“அப்பா என்னை கூட்டிட்டு போயிடுப்பா”… 6 வயது சிறுவனின் கடைசி ஆசை…. கோவையில் நடந்த நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!

By Nanthini on ஆனி 23, 2026

Spread the love

கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது மகனைப் பெற்ற தாயும் அவரது கள்ளக்காதலனும் கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த வழக்கில் கோவையில் உள்ள சிறப்பு நீதிமன்றம் இன்று அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது. கருத்து வேறுபாடு காரணமாகக் கணவரைப் பிரிந்து, தன் இரு குழந்தைகளுடன் வசித்து வந்த திவ்யா என்ற பெண்ணுக்கு, அதே பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் ராஜதுரையுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த கள்ள உறவுக்குக் குழந்தைகள் தடையாக இருப்பதாகக் கருதி, இருவரும் சேர்ந்து அந்த பிஞ்சு குழந்தைகளைத் தொடர்ந்து சித்ரவதை செய்து வந்துள்ளனர்.

அம்மாவும், வீட்டிற்கு வரும் ஒரு மாமாவும் தங்களைத் தடிமனான குச்சியால் அடித்துத் துன்புறுத்துவதாக 6 வயது சிறுவன் அபிஷேக், தன்னைத் தேடி வந்த தந்தையிடம் அழுது கொண்டே புகாரளித்துள்ளான். எப்படியாவது தங்களை இங்கிருந்து அழைத்துச் செல்லுமாறு அக்குழந்தை கெஞ்சிய நிலையில், வீட்டின் வேலைகள் முடிந்ததும் கூட்டிச் செல்வதாகத் தந்தை ஆறுதல் கூறிச் சென்றுள்ளார். ஆனால், தங்களைப் பற்றித் தந்தையிடம் சிறுவன் புகார் கூறியதை அறிந்து ஆத்திரமடைந்த திவ்யாவும் ராஜதுரையும், கடந்த 2020 ஏப்ரல் 19 அன்று சாய்பாபா காலனி பகுதியில் உள்ள ஒரு கடைக்கு அருகே பொதுவெளியில் வைத்து அச்சிறுவனை இரக்கமின்றி கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.

   

பொதுமக்கள் தடுத்தும் கேளாமல் கள்ளக்காதல் ஜோடி அக்குழந்தையைத் தொடர்ந்து தாக்கியதால், படுகாயமடைந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளான். அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தபோதிலும், வழியிலேயே சிறுவன் அபிஷேக்கின் உயிர் பரிதாபமாகப் பிரிந்தது. இதுகுறித்து சாய்பாபா காலனி காவல்துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்து, தாய் திவ்யா மற்றும் கள்ளக்காதலன் ராஜதுரை ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு கோவை சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்தது.

   

வழக்கின் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நீதிபதி விவேகானந்தன் இன்று பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளார். இருவர் மீதான குற்றச்சாட்டுகளும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளிகளுக்கான தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்தது. அதன்படி, சிறுவனைக் கொலை செய்த வழக்கில் ஓட்டுநர் ராஜதுரைக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் இரட்டை ஆயுள் தண்டனையும், பெற்ற தாய் திவ்யாவிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ஆயுள் தண்டனையும் விதித்து நீதிபதி அதிரடி உத்தரவிட்டார். மனசாட்சியற்ற இந்த கள்ளக்காதல் ஜோடிக்கு நீதிமன்றம் வழங்கிய இந்த கடுமையான தண்டனை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.