மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ரஞ்சன் (20) என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முஸ்கான் என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளன. மூத்த மகள் சாராவுக்கு மூன்று வயது ஆகும் நிலையில் ரஞ்சன் குடும்பத்துடன் நாகர்கோவில் கோட்டாறில் தேவாலய திருவிழாவில் அங்கேயே தங்கி பலூன் வியாபாரம் செய்து வந்துள்ளார். நேற்று தன்னுடைய சொந்த ஊருக்கு செல்ல மனைவி மற்றும் குழந்தைகளுடன் ரயில் நிலையத்திற்கு சென்றார்.

அப்போது தன் குழந்தைகளுடன் ரயில் நிலையத்திற்கு வெளியே அமர்ந்திருந்த அவரிடம் வந்த அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் இவர்களுக்கு உணவு வாங்கி கொடுப்பதாகவும் பயணச்சீட்டு வாங்க உதவி செய்வதாகவும் கூறி மூன்று வயது பெண் குழந்தையை தூக்கிச் சென்றுள்ளார். பிறகு இவர்கள் நீண்ட நேரம் தேடியும் அந்த நபர் திரும்பி வராத நிலையில் அச்சமடைந்த வட மாநில தம்பதி இது குறித்து ரயில்வே போலீசாருக்கும் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். இந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். அனைத்து சாலைகளிலும் வாகனங்களை சோதனை இட்டனர்.
ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து குழந்தையை கடத்திச் சென்ற அவர் அடையாளம் காணப்பட்டு தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் அவர் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் என்பதை தெரியவந்தது. இதனை தொடர்ந்து அங்கிருந்து ஆட்டோ ஓட்டுநர்களிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் குழந்தையை கடத்திச் சென்ற யோகேஷ் குமார் என்ற நபரை கைது செய்து அவரிடம் இருந்த குழந்தையை பத்திரமாக மீட்டனர். தற்போது அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள்.
