பெண்களுக்கு விஜய் கொடுத்த வெற்றி பயணம் திட்டம்… அமைச்சர்களின் பதவியை தீர்மானிக்கும் ‘அப்ரூவல் ரேட்டிங்’… தவெக ஆட்சியில் அரங்கேறும் அதிரடி…!

By SATHISH R on ஆனி 29, 2026

Spread the love

தமிழகத்தில் புதிய ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய் பல்வேறு அதிரடி சீர்திருத்தங்களையும் மக்கள் நலத்திட்டங்களையும் அறிவித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, நிர்வாகத் திறனை மேம்படுத்தவும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவும் இரண்டு மிக முக்கிய நகர்வுகளை தவெக அரசு தற்போது எடுத்துள்ளது. 21ஆம் நூற்றாண்டின் அதிநவீன நல்ஆளுமைக்கு எடுத்துக்காட்டாக இந்த திட்டங்கள் அமையும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளில் அதிபர் மற்றும் அமைச்சர்களின் செல்வாக்கை அறிய மக்கள் மத்தியில் ‘அப்ரூவல் ரேட்டிங்’ கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். இதே பாணியில், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு அமைச்சரின் செயல்பாடுகளையும் மதிப்பிட்டு மார்க் போடும் புதிய முறையை முதல்வர் விஜய் கொண்டு வர உள்ளார். அமைச்சர்களின் துறை சார்ந்த செயல்பாடுகள், மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வேகம் மற்றும் ஊழலற்ற நிர்வாகம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, முதல்வர் நேரடியாக இந்த பிரத்யேக மதிப்பீட்டு முறையை கையாள உள்ளார். இதன் மூலம் அமைச்சர்களின் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, மக்கள் பணியில் சுணக்கம் காட்டினால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்படும்.

   

மறுபுறம், பெண்களுக்கான சமூகப் பாதுகாப்பையும் பொருளாதார சுதந்திரத்தையும் உறுதி செய்யும் நோக்கில் ‘வெற்றி பயணம் திட்டம்’ தீவிரமடைந்துள்ளது. தவெக கட்சியின் தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடி, தமிழகத்தில் உள்ள சாதாரண நகரப் பேருந்துகள் மட்டுமின்றி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அனைத்து அரசுப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணத் திட்டத்தை விரிவுபடுத்த அரசு பணிகள் முழுவீச்சில் தொடங்கியுள்ளன. இதற்காக, தமிழ்நாடு போக்குவரத்துத் துறையின் கீழ் இயங்கும் 8 அரசு போக்குவரத்து கழகங்களின் மூலமாக இயக்கப்படும் பேருந்துகள் மற்றும் அதற்குத் தேவையான நிதித் தேவை குறித்த விரிவான அறிக்கையைத் தயாரிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

   

தற்போது தமிழகத்தில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளில் 62 முதல் 64 சதவீதம் பேர் பெண்கள் ஆவர். சாதாரண பேருந்துகளுக்கான இலவச திட்டத்திற்காக தற்போது மாதந்தோறும் 16 கோடி அரசு நிதியுதவியாக வழங்கப்பட்டு வரும் நிலையில், இதனை அனைத்து விரைவுப் பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தும்போது ஏற்படும் கூடுதல் நிதிச் சுமை மற்றும் அதை ஈடுகட்டும் மாற்று வருவாய் ஆதாரங்கள் குறித்து அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். இந்த விரிவான திட்ட அறிக்கை போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபனிடமும், முதலமைச்சரிடமும் விரைவில் சமர்ப்பிக்கப்பட்டு, வரவிருக்கும் மாநில பட்ஜெட்டில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.