“ஆமாம், எங்களுக்கு அது தெரியாது தான்”…. திமுக ஆட்சியின் 8 ஊழல்களை மேஜையைத் தட்டிப் பட்டியலிட்ட முதல்வர் விஜய்…. அனல் பறந்த சட்டமன்ற விவாதம்….!

By Nanthini on ஆனி 23, 2026

Spread the love

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் சட்டம்-ஒழுங்கு மற்றும் நிதிநிலை குறித்த விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குத் தனது பாணியில் மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளார். “சட்டம்-ஒழுங்கு சரியாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை; குறிப்பாகப் பெண்கள் பாதிக்கப்படுவதை இந்த அரசு ஒருபோதும் சகித்துக் கொள்ளாது” என்று உறுதியளித்த அவர், பெண்களுக்குப் பாதுகாப்பளிக்கும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள ‘சிங்கப்பெண் அதிரடிப் படை’ மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் இந்த அரசின் முதற்படிகள் என்று சுட்டிக்காட்டினார். மேலும், பல ஆண்டுகளாகக் கண்டுகொள்ளாமல் விடப்பட்டப் பிரச்சினைகளைத் தற்போது எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புவது பழிபோடும் அரசியல் என்றும், இது ஜனநாயக அரசே தவிர மன்னராட்சி அல்ல என்றும் அவர் ஆணித்தரமாகக் குறிப்பிட்டார்.

கடந்த 40 நாள் ஆட்சியில் தங்களது அரசு செய்த சாதனைகளைப் பட்டியலிட்ட முதலமைச்சர், “நாங்கள் என்ன செய்தோம் என்று கேட்பவர்களுக்குச் சில உதாரணங்களைச் சொல்ல விரும்புகிறேன்” எனக் கூறி அதிரடி காட்டினார். மதுபானக் கடைகள் மூடப்பட்டது, சிங்கப்பெண் சிறப்புப் படை உருவாக்கம், மருத்துவத் துறைக்கு 40 புதிய வாகனங்கள், ஜல் ஜீவன் திட்டச் செயலாக்கம் மற்றும் சட்டவிரோதக் கல்குவாரிகளுக்குச் சீல் வைக்கப்பட்டு கனிம வளங்கள் கடத்தப்படுவது தடுக்கப்பட்டது போன்ற நிகழ்வுகளை அவர் அடுக்கினார். இவை அனைத்தும் வெறும் ‘சாம்பிள்’ தான் என்றும், வரும் நாட்களில் இன்னும் பல மக்கள் நலத்திட்டங்கள் மிகத் தீவிரமாக நிறைவேற்றப்படும் என்றும் தனது உரையில் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

   

முந்தைய ஆட்சியின் போது தமிழகத்தின் கருவூலம் முற்றிலும் தேய்ந்துபோயிருந்த நிலையைச் சுட்டிக்காட்டிய முதலமைச்சர் விஜய், தற்போதைய நிதி நிலைமை குறித்து ஏற்கனவே வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதை நினைவுகூர்ந்தார். இத்தகைய மோசமான சூழலை உருவாக்கி வைத்துவிட்டு, தங்களுக்கு “ஆட்சி செய்யத் தெரியாது” என்று விமர்சிப்பவர்களுக்குத் தனது பாணியில் சாட்டையடி பதிலைக் கொடுத்தார். “ஆமாம், எங்களுக்குத் தெரியாது தான்; எங்கள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் மக்கள் பணியைச் செய்யத் தெரிந்த அளவிற்கு, மக்களின் பணத்தைச் சுருட்டத் தெரியாது” என்று அவர் மிகக் காட்டமாகத் தெரிவித்தார்.

   

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த கால ஆட்சியின் ஊழல்களையும் முறைகேடுகளையும் மிகக் கூர்மையான சொற்களால் பட்டியலிட்டார். டெண்டர் கட்டணங்களை உயர்த்தத் தெரியாது, கலந்தாய்விற்குப் பணம் திரட்டத் தெரியாது, புதிய பணியிடங்களுக்கு லஞ்சம் வாங்கத் தெரியாது, தங்கத்தை உருக்கித் தாரை வார்க்கத் தெரியாது, கோவில் பணத்தைச் சுருட்டவோ அல்லது கனிமங்களை விற்றுக் கொள்ளையடிக்கவோ தெரியாது என்று முந்தைய அரசை வறுத்தெடுத்தார். மேலும், அரசுப் பணத்தைத் தனி நபர் கணக்கிற்கு மாற்றத் தெரியாது என்றும், போதை கலாச்சாரத்தை வளர்க்கத் தெரியாது என்றும் குறிப்பிட்ட அவர், “இதெல்லாம் எங்களுக்குத் தெரியாது தான், அதைத் தெரிந்துகொள்ள நாங்கள் விரும்பவும் இல்லை” என்று முழங்கினார். முதலமைச்சரின் இந்த அதிரடியான உரைக்குக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சிகள் அவையில் அமளியில் ஈடுபட்டதுடன், திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பும் செய்தனர்.