தமிழகத்தில் அரசியல் களம் இதுவரை கண்டிராத ஒரு புதிய திருப்பத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. சட்டமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் விஜய், முந்தைய ஆட்சியின் போது டாஸ்மாக் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளில் இருந்து ‘பார்ட்டி ஃபண்ட்’ என்ற பெயரில் மக்கள் பணம் பெருமளவில் முறைகேடு செய்யப்பட்டதாகத் தொடுத்த குற்றச்சாட்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு உடனடியாகக் கடும் எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக உறுப்பினர்கள், எவ்வித ஆதாரமும் இன்றிப் பொத்தாம்பொதுவாகப் பேசுவது ஏற்கத்தக்கதல்ல என்று கூறி அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். வழக்கமான அரசியல் குற்றச்சாட்டாக இதைக் கடந்து போக விடாமல், சட்டப்பூர்வமான ஆதாரங்களுடன் எதிர்க்கட்சியைச் எதிர்கொள்ள முதலமைச்சர் விஜய் உறுதியான முடிவை எடுத்துள்ளார்.
வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, இக்கடைசி குற்றச்சாட்டுகளுக்கான முழுமையான அதிகாரப்பூர்வ அறிக்கையைச் சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, நிதித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மற்றும் தலைமைச் செயலக மூத்த அதிகாரிகளுக்கு அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் அரசு கருவூலத்திற்கு வந்திருக்க வேண்டிய வருவாய் எங்கு திருப்பப்பட்டது, ஒப்பந்தப் புள்ளிகளில் நிகழ்ந்த முறைகேடுகள் மற்றும் வசூலிக்கப்பட்ட நிதி தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கோப்புகளையும் திரட்டும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்குப் புள்ளிவிவரங்களுடனும் ஆவணச் சான்றுகளுடனும் பதிலளித்து, அவர்களின் எதிர்ப்பை முறியடிக்கத் தவெக அரசு தீவிர வியூகம் அமைத்து வருகிறது. முதல் முழுமையான பட்ஜெட் கூட்டத்தொடர் என்பதால், இந்த அமர்வு அதிக அரசியல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. அரசும் எதிர்க்கட்சியும் நேரடியாக மோதிக்கொள்ளும் இந்த பட்ஜெட் கூட்டத்தொடர், தமிழகச் சட்டமன்ற வரலாற்றிலேயே முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகவும் காரசாரமான விவாதங்களுக்கும் அரசியல் புயலுக்கும் வழிவகுக்கும் என்பது உறுதி.
