தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. கடந்த 2003 ஆம் ஆண்டு மனசினக்கரே என்ற மலையாளத் திரைப்படம் மூலமாக திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு வெளியான ஐயா திரைப்படம் மூலமாக தமிழில் நடிகையாக அறிமுகமான நயன்தாரா தன்னுடைய திரை பயணத்தை தொடங்கினார். அடுத்து ரஜினியுடன் சந்திரமுகி திரைப்படத்தில் நடித்து முன்னணி நடிகை என்ற பெயரை பெற்றார். தொடர்ந்து இன்றுவரை சினிமாவில் முன்னணி நடிகை என்ற பெயருடன் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் நயன்தாரா வாழ்க்கை பயணம் மற்றும் திரை பயணம் ஆகியவற்றை விளக்கும் விதமாக நயன்தாராவின் ஆவணப்படம் நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.
இதில் அவர் நடித்த ஆரம்பகால திரைப்படங்கள் தொடங்கி அண்மையில் வெளியான ஜவான் திரைப்படத்தின் காட்சிகள் வரை இடம்பெற்று இருந்தது. இப்படியான நிலையில் நானும் ரவுடிதான் திரைப்படத்தின் காட்சிகளை நயன்தாராவின் ஆவணப்படத்தில் உரிய அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதற்காக 10 கோடி ரூபாய் கேட்டு படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அதற்கு முன்னதாக தனுஷை கண்டித்து நடிகை நயன்தாரா மூன்று பக்க அளவுக்கு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.
குறிப்பாக தன் மீதும் தன் வாழ்க்கை துணையான விக்னேஷ் சிவன் மீதும் கொண்ட வன்மத்தின் காரணத்தால் இவ்வாறு செயல்படுவதாக நயன்தாரா குறிப்பிட்டு இருந்த நிலையில் இந்த விவகாரம் சில நாட்கள் அப்படியே ஓடிக் கொண்டிருந்தது. தற்போது சந்திரமுகி திரைப்படத்தின் காட்சிகள் நயன்தாராவின் ஆவணப்படத்தில் அனுமதி இன்றி பயன்படுத்தியதாக கூறி அதன் தயாரிப்பாளர் ஐந்து கோடி கேட்டு நயன்தாராவிற்கு நோட்டீஸ் அனுப்பியதாக ஒரு தகவல் இணையத்தில் பரவியது. ஆனால் சம்பந்தப்பட்ட காட்சிகளை பயன்படுத்த நயன்தாராவிற்கு தடை இல்லா சான்று வழங்கியதாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான விளக்கத்தை நயன்தாரா தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது.