CINEMA
பாட சொன்னா வசனமா பேசுறாரு… நிராகரித்த எம் எஸ் விஸ்வநாதன் – தக்க சமயம் பார்த்து பழிவாங்கிய சந்திரபாபு!
தமிழ் சினிமாவில் கோலோச்சிய நகைச்சுவை நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சந்திரபாபு. மற்ற நகைச்சுவை நடிகர்களை விட சந்திரபாபுவின் தனித்திறன் என்பது அவர் ஒரு பன்முகத்திறன் கொண்ட கலைஞர் என்பதுதான். தனது படங்களில் தானே தன் சொந்தக் குரலில் பாடும் திறமையைப் பெற்றிருந்தார் சந்திரபாபு. அவர் பாடிய பல பாடல்கள் இன்றளவும் எவர்கீர்ன் ஹிட்ஸாக உள்ளன. ஆனால் அவருக்கு பாடவே தெரியவில்லை என்று எம் எஸ்வி ஆரம்பத்தில் நிராகரித்தாராம்.
திரைவாய்ப்புக் கிடைப்பதற்கு முன்னால் சந்திரபாபு நடிகராகவோ பாடகராகவோ ஆகவேண்டும் என்ற ஆசையில் இருந்த காலத்தில் இசையமைப்பாளர் எஸ் எம் சுப்பையாவிடம் வாய்ப்புக் கேட்டு சென்றுள்ளார். அப்போது அவரிடம் உதவியாளராக இருந்த எம் எஸ் விஸ்வநாதனை அழைத்து “இந்த பையனுக்கு வாய்ஸ் டெஸ்ட் எடு” எனக் கூறியுள்ளார்.
அப்போது விஸ்வநாதனுக்கு பாடிக் காட்டியுள்ளார் சந்திரபாபு. அவர் இலங்கையில் நீண்ட காலம் இருந்ததால் தமிழை சரியாக உச்சரிக்க முடியாமல் பாடியுள்ளார். இதைக் கேட்ட எம் எஸ் வி, சுப்பையாவிடம் “பாட சொன்னா வசனம் பேசுவது மாதிரி பாடுறாரு” என சொல்லிவிட்டாராம். அதனால் சந்திரபாபுவுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை.
இந்த சம்பவத்தை மனதுக்குள்ளேயே வைத்திருந்த சந்திரபாபு ஒரு சமயம் கிடைத்த போது எம் எஸ் வி யைப் பழிவாங்கியுள்ளார். குலேபகாவலி என்ற திரைப்படத்தில் சந்திரபாபுவுக்காக ஒரு பாடல் உருவாக்கப்பட்டது. அதற்கான மெட்டை சந்திரபாபுவுக்கு போட்டுக் காட்டியுள்ளார் எம் எஸ்வி. அந்த டியூனைக் கேட்ட சந்திரபாபு “இது என்ன மெட்டு. இதில் துள்ளலே இல்லையே, எப்படி நான் இதில் ஆடிப் பாட முடியும்” எனக் கேட்டுள்ளார்.
தன்னை பழிவாங்குவதை உணர்ந்த எம் எஸ் வி வேட்டியை மடித்துக் கொண்டு எழுந்து ட்யூனுக்கு ஏற்றவாறு ஆடிக் காட்டினாராம். அதைப் பார்த்து ஆச்சர்யமான சந்திரபாபு “அவரை கட்டிபிடித்து கன்னத்தில் கிள்ளி “நீ கலைஞண்டா” என பாராட்டினாராம். அன்று முதல் அவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக மாறினராம்.