தமிழகத்தில் 98.45 லட்சம் முன்னுரிமை ரேஷன் கார்டுகளில் மூன்று கோடி உறுப்பினர்களும், 18.64 லட்சம் அந்தியோதயா ரேஷன் கார்டுகளில் 62.88 லட்சம் பேரும் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த இரண்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கான அரிசி ஒதுக்கீட்டில் குறிப்பிட்ட அளவுக்கு கோதுமையை தேசிய ஒதுக்கீட்டின் கீழ் மத்திய அரசு இலவசமாக வழங்கி வருகிறது. இந்நிலையில் முன்னுரிமை மற்றும் அந்தியோதயா ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் ஆதார் சரிபார்ப்பு மூலமாக பாயிண்ட் ஆப் சேல் என்ற விற்பனை முனைய கருவியில் கைவிரல் ரேவையை வைத்து உண்மை தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இருந்தாலும் இதற்கான பணி முழுமையாக முடிவடையவில்லை. இன்னும் 36 லட்சம் பேர் விரல் ரேகையை பதிவு செய்யாமல் உள்ளதால் இந்த பணியை வேகமாக முடிக்க வேண்டும் என மத்திய அரசே மீண்டும் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி விரல் ரேகை பதிவு செய்யும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும் இதனை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது. எனவே இதுவரை கை விரல் ரேகையை பதிவு செய்யாத ரேஷன் அட்டைதாரர்கள் உடனே விரைந்து இந்த சேவையை முடிக்க வேண்டும் எனவும் இல்லை என்றால் இலவச பொருள் கிடைக்காது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
