நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்கக் கோரிய வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தணிக்கைக் குழு பரிந்துரைத்த மாற்றங்களைச் செய்த பிறகும், ஒரு தனி உறுப்பினரின் புகாரால் சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிப்பது ஏற்கத்தக்கதல்ல என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. பாதுகாப்புத் துறை தொடர்பான காட்சிகளைக் காரணம் காட்டி படத்தை முடக்கி வைக்க முடியாது என்று தெரிவித்த நீதிபதி பி.டி. ஆஷா, தணிக்கைச் சான்றிதழை எவ்விதத் தாமதமும் இன்றி உடனடியாக வழங்கத் தணிக்கை வாரியத்திற்கு (CBFC) உத்தரவிட்டார்.
இந்தத் தீர்ப்பு படத்தின் தயாரிப்புத் தரப்பு மற்றும் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தணிக்கைச் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, இன்று வெளியாக வேண்டிய இப்படம் தற்காலிகமாகத் தள்ளிவைக்கப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது நீதிமன்றம் சாதகமான உத்தரவைப் பிறப்பித்துள்ளதால், சான்றிதழ் கிடைத்தவுடன் ‘ஜன நாயகன்’ படத்தின் புதிய வெளியீட்டுத் தேதியைத் தயாரிப்பு நிறுவனம் விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
