வருகின்ற 2026 ஆம் ஆண்டு முதல் சிபிஎஸ்இ மத்திய இடைநிலை கல்வி வாரியம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்க வேண்டுமென்றால் 75% வருகை கட்டாயம் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் உடல் நலக் குறைபாடு குடும்பத்தில் ஏதேனும் மரணம் போன்ற காரணங்களுக்கு மட்டுமே விடுமுறை அளிக்கப்படும். இந்த மாற்றம் கடுமையான விதிமுறைகளை உள்ளடக்கியுள்ளது. மாணவர்களின் வருகைப்பதிவு குறைவை வைத்தே கல்வியின் ஒழுக்கத்தை உறுதி செய்யப்படும் என்றும், சிபிஎஸ்இ தேர்வுகள் விதி 13 மற்றும் 14இன் படி 75% வருகை இல்லை என்றால் வருகின்ற 2026ஆம் ஆண்டு பொது தேர்வில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று எச்சரித்துள்ளது. முன்பு சொன்னது போலவே கடுமையான உடல் நல குறைபாடு,குடும்பத்தில் ஏதேனும் மரணம், அங்கீகரிக்கப்பட்ட தேசிய,சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் காரணத்திற்காக மட்டுமே விடுமுறை எடுத்துக் கொள்ளலாம்.
இருப்பினும்,எதற்காக விடுமுறை எடுக்கப்பட்டதோ அதற்கான முறையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. புதிய கல்வி ஆண்டு தொடங்கும் போதே மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் கல்வியின் விதிமுறைகளை எவ்வாறு பின்பற்ற வேண்டும் பின்பற்றாவிட்டால் வரும் விளைவுகளை தெளிவாக தெரிவிக்க வேண்டும். ஒரு மாணவரின் வருகை பதிவு குறைந்தால் உடனடியாக பள்ளியின் மூலம் பெற்றோர்களுக்கு போனின் மூலமாகவோ, போஸ்டின் மூலமாகவோ, எழுத்துப்படிவமாகவோ எச்சரிக்கை விடுக்க வேண்டும். உடல்நலக் குறைவால் விடுப்பு எடுத்தால் அரசு அங்கீகரிக்கப்பட்டு இருக்கும் மருத்துவரின் சான்றுதலும்,குடும்பத்தின் யாரேனும் இழப்பிற்கு விடுமுறை எடுத்தால் இறப்புச் சான்றிதழும் விடுப்பு எடுத்த உடனே சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
வருகின்ற ஜனவரி1,2026 வரை உள்ள வருகைப்பதிவும்,வருகைப்பதிவு குறைவாக உள்ள விவரங்களும் ஜனவரி 7ஆம் தேதிக்குள் சிபிஎஸ்இ-க்கு பள்ளிகள் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின்னர், வரும் எந்த ஒரு விண்ணப்பங்களும் ஏற்கப்படாது. சிபிஎஸ்சி தனது இணைக்கப்பட்ட பள்ளிகளில் திடீர் ஆய்வுகள் மேற்கொண்டு அதில் ஏதேனும் முறைகேடு இருந்தால் மாணவர்கள் மீதும் பள்ளியின் மீதும் அங்கீகாரத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். வருகை பதிவு குறைவாக உள்ள மாணவர்களின் விவரங்கள் ஒருமுறை சிபிஎஸ்சி க்கு வந்து சேர்ந்து விட்டால் அதில் எந்த மாற்றமும் செய்ய முடியாது ஏதேனும் செய்ய முயன்றால் மோசடியாக எண்ணப்படும் என்று வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும் இது அமலுக்கு வர காரணம் மாணவர்களுக்கு இடையே ஒழுக்கம் மற்றும் பொறுப்புணர்வு வளர்வதற்கான காரணங்களாக சிபிஎஸ்சி சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
