கரூரில் நடைபெற்ற தவெக மாநாட்டின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, அக்கட்சியின் தலைவர் விஜய்யிடம் சிபிஐ (CBI) அதிகாரிகள் இன்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் நடைபெற்று வரும் இந்த விசாரணையில், நான்கு அதிகாரிகள் கொண்ட குழுவினர் விஜய்யிடம் சுமார் 56 கேள்விகளை முன்வைத்துள்ளனர். இந்த கேள்விகளுக்கு அவரிடமிருந்து எழுத்துப்பூர்வமாக பதில்கள் பெறப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பாக கட்சியின் முக்கிய நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர். தற்போது விஜய் அளிக்கும் பதில்களில் ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால், அது அவருக்கு சட்டரீதியாகப் பெரும் சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என்று கூறப்படுகிறது. கடந்த இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து வரும் இந்த விசாரணை, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
