கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த மாடு வியாபாரி முஸ்தபா மற்றும் அவரது கார் ஓட்டுநர் நவ்புல் ஆகியோர், தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் மாட்டுச் சந்தைக்கு வந்தபோது கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வியாபார நிமித்தமாக அடிக்கடி பாவூர்சத்திரம் வந்து செல்லும் முஸ்தபா, நேற்று காலை சந்தைக்கு வந்த பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த அவரது மகன் கேரள காவல்துறையில் புகார் அளித்தார். கேரள போலீசாரின் தகவலின் பேரில், பாவூர்சத்திரம் காவல் ஆய்வாளர் வேல்கனி மற்றும் சார்பு ஆய்வாளர் ராஜேஷ்குமார் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மாடு வியாபாரம் தொடர்பான பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமாக இக்கடத்தல் அரங்கேறியுள்ளது வெளிச்சத்திற்கு வந்தது. முஸ்தபாவுக்கு ஏற்கனவே அறிமுகமான மதுரையைச் சேர்ந்த கருப்பையா (53) மற்றும் அவரது உறவினர்களான கார்த்திக், முத்துராமன், ராமையா, கார் ஓட்டுநர் ராஜ் ஆகிய ஐந்து பேரும் சேர்ந்து முஸ்தபாவையும் அவரது ஓட்டுநரையும் மதுரைக்குக் கடத்திச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, தலைமறைவாக உள்ள கார்த்திக்கைத் தவிர மற்ற நான்கு பேரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தப்பியோடிய கார்த்திக்கை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
