திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள ராமநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (24) என்பவர் பால் கறவை தொழில் செய்து வந்துள்ளார். அதற்காக கணபதி பட்டி கிராமம் சென்றபோது அங்குள்ள சந்திரன் என்பவரின் மகள் ஆர்த்தி (21) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்த நிலையில் வீட்டை எதிர்ப்பை மீறி மூன்று மாதங்களுக்கு முன்பு இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். ராமச்சந்திரன் வேறு ஜாதியை சேர்ந்தவர் என்பதால் ஆர்த்தியின் குடும்பத்தினர் இதனை கடுமையாக எதிர்த்தனர். பலமுறை கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது.
இப்படியான நிலையில் நேற்று ராமச்சந்திரன் வழக்கம் போல குளிப்பட்டி கிராமத்திற்கு பால் கறவைக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தை அய்யம்பாளையம் அருகே பெரியார் பாசன கால்வாய் பாலம் பகுதியில், எதிரே வந்த பெண்ணின் தந்தை சந்திரன் ராமச்சந்திரனை வழிமறித்து அறிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.
கடுமையான காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சரிந்த ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து சந்திரன் தானாகவே காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
