அடப்பாவிங்களா இறந்த பிறகும் இப்படியா..? பசுவை சடலத்தை 1 கி.மீ தூரம் குப்பை வண்டியில்… தரதரவென இழுத்துச் சென்ற கொடூரம்… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!”

By Swetha on ஆடி 1, 2026

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் பெத்துல் மாவட்டத்தில் உள்ள ஜல்லார் கிராம ஊராட்சியில், இறந்த பசு ஒன்றின் உடல் குப்பை அள்ளும் வாகனத்தால் சுமார் 1 கிலோமீட்டர் தூரத்திற்குத் தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. “இறப்பிலும் கூட கண்ணியம் இல்லை” என்று இந்த கொடூரமான செயலைக் கண்டித்து அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

உள்ளூர் அதிகாரிகளின் கூற்றுப்படி, பரத்வாடா சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி அந்தப் பசு இரண்டு நாட்களுக்கு முன்பே உயிரிழந்துள்ளது. அதன் உரிமையாளர்கள் யாரும் வராததால், சாலையோரம் கிடந்த பசுவின் உடல் அழுகத் தொடங்கி துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உருவானது. அந்த உடலை அப்புறப்படுத்த டிராக்டர் போன்ற மாற்று வாகனங்கள் உடனடியாக கிடைக்காததால், அங்கிருந்த துப்புரவுப் பணியாளர்கள் பசுவின் உடலைக் கயிற்றால் கட்டி குப்பை வண்டியின் மூலம் இழுத்துச் சென்றுள்ளனர்.

   

இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு ராஷ்டிரிய இந்து சேனா உள்ளிட்ட பல்வேறு பசு பாதுகாப்பு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தின. இதனைத் தொடர்ந்து, ஜல்லார் கிராம ஊராட்சித் தலைவர் மனிஷ் நர்வாரே, குப்பை வண்டி ஓட்டுநரான நிகில் பாரஸ்கருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும், இந்தச் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், அதன் பின்னர் அந்தப் பசுவின் உடல் முறைப்படி இறுதிச் சடங்குகளுடன் அடக்கம் செய்யப்பட்டதாகவும் ஊராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.