டெல்லியின் மெஹ்ராலி பகுதியில் தன் குடும்பத்துடன் பாதையில் தூங்கிக் கொண்டிருந்த 11 வயது சிறுமியை, பப்லு என்ற கார் ஓட்டுநர் கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்து, படுகொலை செய்துள்ளார். இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்து தகவல் அறிந்த டெல்லி போலீசார், சிசிடிவி காட்சிகள் மற்றும் கார் நிறுவனத்தின் ஜிபிஎஸ் தரவுகளைக் கொண்டு, குற்றவாளியை மிக விரைவாக 4 மணி நேரத்திற்குள் கைது செய்தனர். விசாரணையில், அதிக மதுபோதையில் இருந்த அந்த ஓட்டுநர் சிறுமியைக் கடத்திச் சென்று காட்டுப் பகுதியில் இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார்.
கைது செய்யப்பட்ட குற்றவாளியை, குற்றச் சம்பவத்தின் வரிசைமுறையை மறுசீரமைப்பு செய்து ஆய்வு செய்வதற்காக குருகிராம்-பரிதாபாத் சாலைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது போலீஸ் காவலில் இருந்து தப்பியோட பப்லு முயன்றதால், நிலைமையைக் கட்டுப்படுத்த போலீசார் அவனது காலில் துப்பாக்கியால் சுட்டனர். காலில் காயமடைந்த அவன், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் போது வலியால் “செத்துவிட்டேன், செத்துவிட்டேன்” என்று அலறும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
போலீஸ் விசாரணையில், பப்லு ஏற்கனவே ஐந்து குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்பது தெரியவந்துள்ளது. இத்தகைய குற்றப் பின்னணி கொண்ட ஒரு நபரை எப்படி தங்களது செயலியில் ஓட்டுநராக அனுமதித்தார்கள் என்று சம்பந்தப்பட்ட கார் சேவை நிறுவனத்திற்கு டெல்லி போலீசார் விளக்கம் கேட்டு கடுமையான நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மேலும், இந்த கொடூரக் குற்றத்தைச் செய்த பிறகும், அந்த ஓட்டுநர் எவ்வித பயமுமின்றி வழக்கம் போல ஒரு சவாரியை ஏற்றிச் சென்றுள்ளார் என்ற அதிர்ச்சித் தகவலும் விசாரணையில் வெளிவந்துள்ளது.
