இதயமே நின்னுடுச்சு!”… நேருக்கு நேர் மோதிய கார்-ஸ்கூட்டி… நூலிழையில் உயிர் தப்பிய முதியவர்.. பள்ளிபாளையத்தில் நடந்த பயங்கரம்…!!

By Muthu Mani on வைகாசி 20, 2026

Spread the love

பள்ளிபாளையம் அருகே தெற்குப்பாளையம் பகுதியில், தனியார் நூற்பாலைக்குச் சொந்தமான கார் ஒன்று வடமாநில பெண் தொழிலாளர்கள் 6 பேருடன் வெப்படை நோக்கி அதிவேகமாகச் சென்று கொண்டிருந்தபோது, சாலையைக் கடக்க முயன்ற முதியவர் மற்றும் அவரது பேத்தி சென்ற ஸ்கூட்டி மீது மோதி விபத்துக்குள்ளானது. கட்டுப்பாட்டை இழந்த கார், ஸ்கூட்டியின் மீது மோதிய வேகத்தில் சாலையோரம் இருந்த மின்கம்பத்திற்கு அருகே உள்ள தடுப்புச் சுவரில் பயங்கரமாக மோதி நின்றது. இந்த விபத்தில் காரில் இருந்த 5 பெண் தொழிலாளர்கள், முதியவர் மற்றும் அவரது பேத்தி என மொத்தம் 7 பேர் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காகப் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து நடந்தபோது சுவருக்கு அருகே நடந்து சென்ற மற்றொரு முதியவர், கார் தன் மீது மோத வருவதைக் கண்டு அதிர்ஷ்டவசமாக சில அங்குல இடைவெளியில் தப்பியோடும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. நெஞ்சை நடுங்க வைக்கும் இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பள்ளிபாளையம் போலீசார், காரை அதிவேகமாக ஓட்டி வந்த ஓட்டுநரின் அஜாக்கிரதை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

   

பள்ளிபாளையம்-வெப்படை சாலையில் மில் வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் அடிக்கடி அதிவேகமாகச் செல்வதால் விபத்துகள் தொடர்கதையாகி வருவதாக அப்பகுதி மக்கள் ஆதங்கப்படுகின்றனர். நெடுஞ்சாலைகளில் சாலையைக் கடக்கும்போது வாகனங்களின் வருகையை முழுமையாகக் கவனித்து, போதிய இடைவெளி இருக்கும்போது மட்டுமே கடக்க வேண்டும் என்றும், நடுசாலையில் வாகனங்களை நிறுத்திப் பதற்றமடைவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் போக்குவரத்து போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.