தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போதே தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. இந்த முறை எப்படியாவது அதிமுக ஆட்சியை தமிழகத்தில் நிலைநாட்ட வேண்டும் என்ற சிந்தனையில் இபிஎஸ் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளார். ஆனால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று பாஜக சொல்லிக் கொண்டிருக்க ஈபிஎஸ் தான்தான் முதல்வர் வேட்பாளர் என மறுபக்கம் சொல்லிக் கொண்டிருக்கிறார். அதேசமயம் கூட்டணி வேண்டுமா, வேண்டாமா என்பதை தாங்கள்தான் முடிவு செய்வோம் என்றும் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்திருந்தார். இப்படியான நிலையில் கூட்டணி ஆட்சி என்று பாஜகவினரும் தனித்து ஆட்சி என்று அதிமுகவினரும் கூறி வருகிறார்கள். இதனால் அதிமுக மற்றும் பாஜக இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகின்றது.
இப்படியான நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தனி பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணி ஆட்சி தான் என டிடிவி தினகரன் திட்டவட்டமாக கூறியுள்ளார். 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தனி பெரும்பான்மை பெற்ற போதிலும் மத்திய அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கு இடம் அளித்ததை சுட்டிக்காட்டி இந்த கருத்தை தெரிவித்துள்ளார். ஆனால் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று இபிஎஸ் பேசி வரும் நிலையில் டிடிவி தினகரனின் இந்த பேச்சு அரசியலில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.
