ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சிரஞ்சீவி தாமோதர குப்தா. இவரது மனைவி ரேவதி. இந்த தம்பதியினருக்கு ரித்விக் ஹர்ஷத்(15), தித்விக் ஹர்ஷத்(11) என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். சிரஞ்சீவி மகன்களின் பள்ளி படிப்புக்காக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஈஞ்சம்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பு வாடகைக்கு குடியேறினார். மேலும் தனது தொழிலை விரிவுபடுத்த பல கோடி ரூபாய் கடன் வாங்கியதாக தெரிகிறது.
ஆனால் அந்தப் பணத்தை சரியாக கொடுக்க முடியவில்லை. பண நெருக்கடி இருந்ததால் அவர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட வில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சிரஞ்சீவி நேற்று சேலத்தில் வசிக்கும் தனது மாமா முரளியின் வங்கி கணக்கிற்கு ஒரு லட்ச ரூபாய் பணத்தை அனுப்பியுள்ளார்.
பின்னர் மனைவி மற்றும் மகன்களின் முகத்தை பிளாஸ்டிக் கவரால் கட்டி மூச்சை திணறடித்து கொலை செய்துவிட்டு, அவரும் பாத்ரூமுக்கு சென்று கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நான்கு பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
