பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர் என்பவருடன் திருமணம் நடந்தது. குடும்பத் தகராறு காரணமாகச் சந்தீப் கவுர் கோபித்துக் கொண்டு தரன்தாரனில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்று வசித்து வந்தார். இந்நிலையில், ஜூன் 13 அன்று லவ்பிரீத் சிங் தனது மனைவியைச் சமாதானப்படுத்தி மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காகத் தனது மாமியார் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அங்குச் சென்ற லவ்பிரீத் சிங்கிற்கும், அவரது மாமியார் வீட்டினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைக்கலப்பாக மாறியது. அப்போது, கோபமடைந்த லவ்பிரீத்தின் மைத்துனர் சாஜன் சிங், பெட்ரோல் பாட்டிலை எடுத்து வந்து லவ்பிரீத் மீது ஊற்றியுள்ளார். இந்தச் சண்டையை விலக்க வந்த சாஜன் சிங்கின் அண்ணி குர்ஜித் கவுர் மீதும் பெட்ரோல் சிதறியது. தொடர்ந்து சாஜன் சிங் லைட்டரால் தீ வைத்ததில், லவ்பிரீத் சிங் மற்றும் குர்ஜித் கவுர் ஆகிய இருவர் மீதும் தீப்பற்றி எரிந்தது.
உடம்பில் பலத்த தீக்காயமடைந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி லவ்பிரீத் சிங் மற்றும் குர்ஜித் கவுர் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், முதன்மைக் குற்றவாளியான சாஜன் சிங்கை கைது செய்து நீதிமன்றக் காவலில் வைத்துள்ளனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சியும் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
