கர்நாடகா மாநிலம் மைசூரு அருகே திருமணக் கொண்டாட்டத்தில் இருந்த குடும்பமே ஒட்டுமொத்தமாகத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 21 வயதான மணப்பெண் ரக்ஷிதா, அவரது தந்தை சிவண்ணா மற்றும் தாய் நாகரத்னா ஆகியோர் தங்களது வீட்டின் அருகே உள்ள ஏரியில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். ரக்ஷிதாவிற்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, மறுநாள் திருமணம் நடக்கவிருந்த சூழலில் இந்தத் துயர முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்கொலைக்கு முன்பாக அவர்கள் எழுதி வைத்துள்ள கடிதம் ஒன்றை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
அதே கிராமத்தைச் சேர்ந்த உல்லாஸ் கௌடா என்பவரே தங்களது இந்த முடிவிற்குக் காரணம் என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உல்லாஸ் கௌடா, ரக்ஷிதாவைத் தன்னைத் திருமணம் செய்யும்படி தொடர்ந்து வற்புறுத்தி வந்ததோடு, அவர் மீது அவதூறுகளைப் பரப்பியுள்ளார். மேலும், திருமணம் நிச்சயக்கப்பட்ட மணமகனுக்கு ரக்ஷிதாவின் புகைப்படங்களை அனுப்பி, மனரீதியாகக் கடுமையான தொல்லைகளைக் கொடுத்துள்ளார். இந்த அவமானத்தைத் தாங்க முடியாமல் அந்தக் குடும்பமே தற்கொலை செய்து கொண்ட நிலையில், கடிதத்தின் அடிப்படையில் டி. நரசிபுரா போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
