ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் துர்காடா பகுதியை சேர்ந்த தீப்தி என்ற 17 வயது மாணவி பிளஸ் டூ படித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த அசோக் (19) என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார். தசரா பண்டிகையை முன்னிட்டு பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் தீப்தி காக்கிநாடாவில் உள்ள தன்னுடைய உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனை அறிந்த அசோக் அங்கு சென்றுள்ளார். பிறகு காதலியை தனியாக வருமாறு அழைத்துள்ளார். உடனே தீப்தி அதே பகுதியில் உள்ள காட்டேறு கால்வாய்க் கரை அருகே சென்றுள்ளார்.
காதலியின் வருகைக்காக காத்திருந்த அசோக் திடீரென்று தன் கையில் வைத்திருந்த பிளேடால் தீப்தியின் கழுத்தை அறுத்துள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த மாணவி சிறிது நேரத்தில் உயிரிழந்தார். உடனே அங்கிருந்து தப்பிச் சென்ற அசோக் ரயில் முன் பாய்ந்து தானும் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் இருவருடைய உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் காதலியை கொன்று வாலிபர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
