குருகிராமில் உள்ள செக்டார் 69 பகுதியில், தன்னுயுடன் ஒரே அறையில் வசித்து வந்த காதலியை (Live-in Partner), அவரது காதலன் மிருகத்தனமாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் திரிபுராவைச் சேர்ந்தவர் மற்றும் குருகிராமில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் பயோடெக் பயின்று வரும் மாணவி ஆவார். இவருக்கும் டெல்லியைச் சேர்ந்த சிவம் (19) என்பவருக்கும் கடந்த 2025 செப்டம்பரில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இரு வீட்டாரும் இவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கத் திட்டமிட்டிருந்த நிலையில், சிவம் தனது காதலி மீது அதிக சந்தேகம் கொண்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
சம்பவத்தன்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், சிவம் அந்தப் பெண்ணை ஒரு மிருகத்தைப் போல கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மாணவி, குருகிராம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் நிலைமை மோசமானதால் டெல்லி எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மாணவியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், குருகிராம் பாட்ஷாபூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து 19 வயதான சிவத்தைக் கைது செய்துள்ளனர். ஒரு படித்த மாணவிக்குத் தனது வாழ்க்கைத் துணையால் நேர்ந்த இந்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
