கேரள மாநிலம் திருச்சூர் அருகே நள்ளிரவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் ஆல்ஜோ, பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூக்கத்தில் இருந்த சிறுவன் திடீரென அலறித் துடித்து, ஏதோ கடித்துவிட்டதாகவும் உடல் வலிப்பதாகவும் பெற்றோரிடம் கூறியுள்ளான். ஆனால், பூச்சி ஏதேனும் கடித்திருக்கும் என நினைத்த பெற்றோர், காலையில் பார்த்துக்கொள்ளலாம் என அசால்ட்டாகக் கூறி மீண்டும் தூங்க வைத்துள்ளனர். மறுநாள் காலையில் சிறுவன் சுயநினைவின்றி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சிறுவன் படுத்திருந்த அறையைச் சோதனையிட்டபோது, அவனது தலையணைக்கு அடியில் இரண்டு அடி நீளமுள்ள கொடிய விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பு பதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பாதுகாப்பான வீட்டிற்குள்ளேயே பாம்பு புகுந்து சிறுவனைப் பறித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை உண்டாக்கியுள்ளது. காலி மனைகள் மற்றும் புதர்களில் பாம்புகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதே இதற்கு காரணம் என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். உரிய நேரத்தில் கவனிக்கத் தவறிய பெற்றோரின் அலட்சியம் ஒரு பிஞ்சு உயிரைப் பறித்துள்ளதாகப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
