கோவை தேர்தல் களம் தற்போது உச்சக்கட்ட அரசியல் பரபரப்பில் தகித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, கோவை தெற்கு தொகுதியில் திமுகவினர் வாக்காளர்களுக்குப் பெரிய அளவில் பணப்பட்டுவாடா செய்வதாக அதிமுக தரப்பில் சரமாரியான புகார்கள் எழுந்துள்ளன. அதிகாரப்பூர்வ புகார்கள் அளித்தும் தேர்தல் அதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன், அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகளுடன் இணைந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்த போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய அம்மன் அர்ஜுனன், திமுக பகுதி செயலாளர் வீட்டில் சுமார் 3 கோடி ரூபாய் பணம் இருப்பதாக இரவு 8 மணிக்கே பறக்கும் படைக்குத் தகவல் கொடுத்தும், அவர்கள் 11 மணிக்கு மேல்தான் சம்பவ இடத்திற்கு வந்ததாகக் குற்றம் சாட்டினார். “பறக்கும் படை என்றால் பறந்து வர வேண்டாமா?” என்று கேள்வி எழுப்பிய அவர், ஆளுங்கட்சிக்குச் சாதகமாக அதிகாரிகள் மெத்தனமாகச் செயல்படுவதாகவும், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நபர்கள் கோவையில் உள்ள விடுதிகளில் தங்கி முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் ஆவேசமாகத் தெரிவித்தார்.
காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அம்மன் அர்ஜுனன், தேர்தல் அதிகாரிகள் மீது தமக்குத் துளியும் நம்பிக்கை இல்லை என்றும், மாவட்ட தேர்தல் அதிகாரி நேரில் வந்து விளக்கம் அளிக்கும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்றும் உறுதியாகத் தெரிவித்தார். திமுகவினர் காவல் நிலையத்திற்குள்ளேயே புகுந்து ரவுடியிசம் செய்வதாகவும், மக்களைப் பணத்தால் அசிங்கப்படுத்தும் இந்தச் சூழலில் கோவை தெற்கு தொகுதியில் தேர்தலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“கோவை ஒரு அமைதியான பூமி, அதை கலவர பூமியாக்கச் சிலர் முயற்சிக்கிறார்கள்” என்று குறிப்பிட்ட அவர், சாதாரண மக்களைத் துன்புறுத்தும் அதிகாரிகள், பணப்பட்டுவாடா புகார்கள் மீது மட்டும் மௌனம் காப்பது ஏன் என்று வினவினார். நேர்மையான முறையில் தேர்தல் நடத்தச் சூழல் இல்லாததால், தேர்தலை ரத்து செய்துவிட்டு அமைதி திரும்பிய பிறகு நடத்த வேண்டும் என்பதே அதிமுக மற்றும் பாஜகவினரின் பிரதான கோரிக்கையாக உள்ளது. இந்த தர்ணா போராட்டத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, அப்பகுதியே பரபரப்பாகக் காணப்படுகிறது.
