உத்தரப்பிரதேச மாநிலம் ஷாம்லி பகுதியைச் சேர்ந்த கரினா என்பவரும் ஹிமான்ஷு என்பவரும் கடந்த 8 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்குக் கரினாவின் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், பெற்றோர் அவருக்கு வேறு ஒரு நபருடன் திருமண நிச்சயதார்த்தம் செய்து வைத்தனர். இதனிடையே, ஹிமான்ஷுவுடனான காதல் விவகாரம் கரினாவின் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளைக்குத் தெரியவரவே, அவர் ஜூலை 28 அன்று இரவு கரினாவின் பெற்றாரைத் தொடர்புகொண்டு திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, கரினா தனது சொந்த வீட்டிலேயே கழுத்தில் கயிறு வடு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் வேளையில், கரினாவின் வீட்டார் தான் அவரைக் கொன்றதாகக் காதலன் ஹிமான்ஷு குற்றம் சாட்டியுள்ளார். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் விவாதத்தையும், குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் எழுப்பியுள்ளது.
