பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தைச் சேர்ந்த சோட்டி குமாரி என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தன் கணவரையும் குடும்பத்தினரையும் பிரிந்து ரிஷப் குமார் என்பவருடன் புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்காக வெளியேறினார். இவர்கள் இருவரும் யூனியன் பிரதேசமான தாமனில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில், அந்த வாடகை வீட்டின் பூட்டிய அறைக்குள் இருந்த ஒரு ட்ரோலி பேக்கிற்குள் சோட்டி குமாரி சடலமாக அடைக்கப்பட்டு இருந்ததைக் காவல்துறையினர் கண்டறிந்து மீட்டுள்ளனர்.
இக்கொடூரக் கொலையைச் செய்ததாகச் சந்தேகிக்கப்படும் அவரது காதலன் ரிஷப் குமார், சம்பவம் நடந்ததில் இருந்து தலைமறைவாகியுள்ளார். உடலைக் கைப்பற்றிய தாமன் காவல்துறையினர், அதைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதோடு கொலை வழக்குப் பதிவு செய்து தலைமறைவான ரிஷப் குமாரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கள்ளக்காதலால் இளம்பெண் ஒருவர் டிராலி பைக்குள் சடலமாக மீட்கப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
