சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்டோர் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் கங்குவா. இந்த திரைப்படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருந்த நிலையில் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படத்தின் சண்டைக் காட்சிகளை சுப்ரீம் சுந்தர் மாஸ்டர் இயக்கியுள்ள நிலையில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா படம் குறித்து தான் எங்கு பேசினாலும் பெரும் நம்பிக்கையோடு பேசி வந்தார்.

இதனை பலரும் ஓவர் பில்டப்பாக பார்த்த நிலையில் படம் 2000 கோடிகளை அசால்டாக வசூல் செய்யும் என்றும் படம் ஹாலிவுட் தரத்திற்கு உள்ளது எனவும் கூறினார்கள். இப்படி பல எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான கங்குவா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. படம் பார்த்த பலரும் படத்தில் அதிக சத்தம் இருப்பதாக விமர்சித்தனர். இந்த நிலையில் கங்குவா படம் குறித்து சூர்யாவின் மனைவியும் நடிகையுமான ஜோதிகா கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட பதிவில், கங்குவா படத்தில் முதல் அரை மணி நேரம் கண்டிப்பாக அந்த சத்தம் காரணமாக ரசிகர்களிடம் சென்று சேரவில்லை.

ஆனால் கண்டிப்பாக சிறந்த அனுபவம். இது போன்ற ஒரு ஒளிப்பதிவை தமிழ் சினிமா இதுவரை பார்த்திருக்காது. சமூக வலைத்தளங்களில் எதிர்மறை விமர்சனங்கள் வந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. படத்தின் முதல் காட்சி முடியும் முன்னரே எதிர்மறை விமர்சனம் வந்தது. முதல் நாளிலேயே இவ்வளவு விமர்சனங்களை பரப்பியது வேதனை அளிக்கிறது. பல குழுக்களால் இணைந்து கங்குவா படத்திற்கு எதிராக விமர்சனத்தை பரப்பி வருகின்றனர். சமீபத்தில் வெளியான பெரிய பட்ஜெட் படங்களில் பெண்களுக்கு எதிரான வசனங்கள் மற்றும் இரட்டை அர்த்த வசனங்கள் இருந்தது. அந்த அளவுக்கு இவர்கள் நெகட்டிவான விமர்சனத்தை கொடுக்கவில்லை. கங்குவாவின் நேர்மறைகள் பற்றி ஏன் யாரும் பேசவில்லை என பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் ஜோதிகாவின் பதிவை விமர்சித்து ப்ளூ சட்டை மாறன் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் பெரிய தோல்விப்படங்களை தரும்போது.. கடும் விமர்சனம் வரும்போது.. அதற்கு எதிராக.. மக்களிடம்..குழாயடி சண்டை போடாமல் அடுத்த படங்கள் மூலம் மக்களிடம் பாராட்டை பெறும் பிரபல கலைஞர்கள்.. உதாரணத்திற்கு: கமல், மணிரத்னம், இயக்குனர் பாலா. தக் லைஃப், இந்தியன் 3, வணங்கான் படங்கள் மூலம் மீண்டும் வெற்றியை தரலாம். இந்தியன் 2 கடுமையாக விமர்சிக்கப்பட்டு தோல்வி அடைந்ததற்கு.. மக்களை பார்த்து திட்டமிட்ட சதிகாரர்கள் என கமல், ஷங்கர், சுபாஸ்கரன் உள்ளிட்டோர் கத்தவில்லை. புரிந்தால் சரி என பதிவிட்டுள்ளார்.
பெரிய தோல்விப்படங்களை தரும்போது.. கடும் விமர்சனம் வரும்போது.. அதற்கு எதிராக.. மக்களிடம்..குழாயடி சண்டை போடாமல் அடுத்த படங்கள் மூலம் மக்களிடம் பாராட்டை பெறும் பிரபல கலைஞர்கள்.. உதாரணத்திற்கு:
கமல், மணிரத்னம், இயக்குனர் பாலா.
தக் லைஃப், இந்தியன் 3, வணங்கான் படங்கள் மூலம்…
— Blue Sattai Maran (@tamiltalkies) November 17, 2024
