விமர்சகர் ப்ளு சட்டை மாறன், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது முன்வைத்துள்ள கடுமையான விமர்சனம் தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. விஜய் தனது அரசியல் பேச்சுகளில் “ஊழலை ஒழிப்பேன்” என்று முழங்குவதை சுட்டிக்காட்டியுள்ள மாறன், கடந்த 15 ஆண்டுகளாக வருமானத்தை மறைத்து கணக்கு காட்டாததற்காக விஜய்க்கு வருமான வரித்துறை 1.5 கோடி ரூபாய் அபராதம் விதித்ததைச் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த அபராதம் செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், இது போன்றச் செயல்களைச் செய்துகொண்டு ஊழலை ஒழிப்பேன் என்று பேசுவது “வெட்கக்கேடு” என அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
எப்போதும் முன்னணி நடிகர்களைக் கடுமையாகச் சாடும் ப்ளு சட்டை மாறன், இந்த முறை விஜய்யின் அரசியல் நேர்மையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளார். சினிமாவில் பெரும் சம்பளம் வாங்கும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்ற ரீதியில் அவரது பதிவு நீள்கிறது. ஏற்கனவே விஜய்யின் அரசியல் வருகை குறித்துப் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், இந்த வருமான வரி விவகாரம் அவரது அரசியல் எதிரிகளுக்கும் ஒரு வாய்ப்பாக மாறியுள்ளது.
