சமீபத்தில் தமிழகம் வந்திருந்த பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ் வாய்ப்பு கேட்டு கடிதம் எழுதி இருந்த நிலையில் அவருக்கு பிரதமரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட ஓபிஎஸ் பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். தொடர்ந்து இவர் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்த நிலையில் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. அதே சமயம் விஜயுடன் கூட்டணி வைக்க உள்ளதாகவும் கூறப்பட்ட நிலையில் இது தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய ஓபிஎஸ் அடுத்தடுத்து அரசியல் ரீதியான நகர்வுகளை எடுத்து வருகின்றார்.
இந்நிலையில் ஓபிஎஸ்ஐ விமர்சிக்க கூடாது என நிர்வாகிகளுக்கு பாஜக தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது. NDA கூட்டணியில் இருந்து தொடர்ச்சியாக ஓபிஎஸ் ஓரம் கட்டப்பட்டதால் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அவர் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அவரை கூட்டணியில் இணைக்க பாஜக தீவிர முயற்சி எடுத்து வருகிறது. தமிழகம் வரும் பிரதமர் மோடியுடன் அவரை சந்திக்க வைக்கவும் பாஜக திட்டமிட்டுள்ளது. இப்படியான நிலையில் ஓபிஎஸ் பற்றி யாரும் விமர்சிக்க கூடாது என்று நிர்வாகிகளுக்கு பாஜக தலைமை உத்தரவிட்டு உள்ள நிலையில் மீண்டும் ஓபிஎஸ் பாஜக பக்கம் செல்வாரா என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.
