ஈரோடு சூரம்பட்டி பகுதியைச் சேர்ந்த மணி என்பவரின் மனைவி சுகுணா (37), தனது குடும்பத் தேவைக்காக அசோகபுரத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகி கிருஷ்ணகுமாரிடம் ரூ.2 லட்சம் கடன் வாங்கியுள்ளார். வாங்கிய கடனுக்கு அசல் மற்றும் வட்டியையும் சேர்த்து, வாங்கிய தொகையை விட அதிகப் பணத்தைத் திருப்பிச் செலுத்தியுள்ளார். இருப்பினும், கிருஷ்ணகுமார் மேலும் கூடுதலாக வட்டி மற்றும் அசல் தொகையைக் கேட்டு, சுகுணாவைக் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கியதோடு, குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்குத் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார்.
பணம் தராவிட்டால் உனது கிட்னியை விற்றாவது பணத்தைக் கட்டுமாறும், கிட்னியை விலைக்கு வாங்கும் ஆட்களையும் மற்றும் அதற்கான மருத்துவமனையையும் தனக்குத் தெரியும் என்றும் கிருஷ்ணகுமார் தகாத வார்த்தைகளால் மிரட்டியுள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன்பே கணவரை இழந்து, 2 பெண் மகள்களுடன் தனியாக வசித்து வரும் தனக்கு, இந்த பாஜக நிர்வாகியிடமிருந்து உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என சுகுணா ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் (SP) புகார் மனு அளித்துள்ளார்.
