தமிழக அரசியலில் தொகுதிப் பங்கீடு விவகாரம் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இதனைத் தொடர்ந்து, பாஜகவின் நயினார் நாகேந்திரன், பாமகவின் அன்புமணி ராமதாஸ் மற்றும் அமமுகவின் டி.டி.வி. தினகரன் ஆகியோர் இன்று அதிகாலை டெல்லிக்கு விரைந்துள்ளனர். “தமிழகத்தில் நாங்கள்தான் பெரிய கட்சி, கூட்டணிக்குத் தலைமையேற்போம்” என எடப்பாடி தரப்பு கூறி வந்தாலும், தற்போதைய சூழலில் டெல்லி தலைமையின் கைகளே ஓங்கியிருப்பதாகவும், கூட்டணியின் ‘ரிமோட் கண்ட்ரோல்’ அமித் ஷா வசம் சென்றுள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
டெல்லி செல்லும் அன்புமணி மற்றும் தினகரன் ஆகியோர், தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஒருமித்த கருத்துடன் செயல்பட முடிவு செய்துள்ளனர். குறிப்பாக, தங்களுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் இரட்டை இலக்கத்தில் (குறைந்தது 10-க்கும் மேல்) இருக்க வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர். சீட் எண்ணிக்கையைக் குறைத்தால் அதை ஏற்கக்கூடாது என்பதில் இருவரும் தெளிவாக இருக்கிறார்கள். அமித் ஷாவையோ அல்லது பியூஸ் கோயல், நட்டா போன்ற முக்கியத் தலைவர்களையோ சந்திக்கும்போது, இந்த நிபந்தனையை முன்வைக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
மற்றொரு முக்கியப் பிரச்சினையாக, கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களைத் தாமரை சின்னத்தில் போட்டியிடச் சொல்லி பாஜக அழுத்தம் கொடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக நேற்று இரவு அன்புமணி மற்றும் தினகரன் இருவரும் ‘ஃபேஸ் டைம்’ மூலம் ஆலோசித்துள்ளனர். அப்போது, “தாமரை சின்னத்திலோ அல்லது பாதி இடங்களில் சொந்தச் சின்னத்திலோ போட்டியிடுங்கள்” என முன்வைக்கப்படும் எந்தவொரு சமரசத்தையும் ஏற்கக்கூடாது என அவர்கள் பேசி முடிவெடுத்துள்ளனர். தனித்துவம் கருதி தங்கள் சொந்தச் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்பதில் இருவரும் பிடிவாதமாக உள்ளனர்.
இந்த ஆலோசனையின் போது, எடப்பாடி பழனிசாமி தங்களை இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடச் சொல்லி நெருக்கடி கொடுத்தது குறித்தும் விவாதிக்கப்பட்டது. “தனித்தனிக் கட்சிகளாக இருக்கும்போது மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது அரசியல் தர்மம் அல்ல” என்று அன்புமணி தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் சிறிய கட்சிகளுக்குக் கொடுக்கப்படும் அதே அழுத்தம் இங்கு நிலவுவதாக அவர்கள் உணர்கின்றனர். டெல்லியில் பாஜக தலைமை தரப்போகும் நெருக்கடியையும், அதற்கு இந்தத் தலைவர்கள் காட்டப்போகும் எதிர்வினையையும் பொறுத்தே கூட்டணியின் அடுத்தகட்ட நகர்வு அமையும்.
