தமிழ் திரையுலகில் திரைக்கதை அமைப்பதில் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி, ‘திரைக்கதை மன்னன்’ என்று போற்றப்பட்டவர் இயக்குநர் கே. பாக்யராஜ். எழுத்து, இயக்கம், நடிப்பு, இசை என பன்முகத் திறமைகளுடன் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தியவர். சாதாரண மனிதர்களின் உணர்வுகளையும், நுணுக்கமான நகைச்சுவையையும் தனது படங்களின் அடிநாதமாகக் கொண்டு, குறிப்பாக பெண் ரசிகர்களின் பேராதரவைப் பெற்றவராகத் திகழ்ந்தார். ஒரு கட்டத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரால் தனது ‘கலையுலக வாரிசு’ என்றும் அறிவிக்கப்பட்ட பெருமைக்குரியவர்.
அக்காலத்தில் ரஜினி, கமல் போன்ற உச்ச நட்சத்திரங்களின் திரைப்படங்களே பாக்ஸ் ஆபீஸில் மிரட்டிக் கொண்டிருந்த வேளையில், அவர்களுக்கு இணையாக வசூல் சாதனை படைத்தவர் பாக்யராஜ். அந்த வகையில் தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதன்முறையாக 1 கோடி ரூபாய் வசூல் செய்து இமாலய சாதனை படைத்த பெருமை இவருடைய ஒரு திரைப்படத்திற்கு உண்டு. அதுதான் 1984 ஆம் ஆண்டு பாக்யராஜ் தயாரித்து, எழுதி, இயக்கி, கதாநாயகனாக நடித்து வெளியான ‘தாவணிக் கனவுகள்’ திரைப்படம் ஆகும்.
இத்திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தந்தையில்லாமல் தவிக்கும் தனது ஐந்து தங்கைகள் மற்றும் தாயைக் காப்பற்ற, ராணுவ அதிகாரியான சிவாஜி கணேசனின் உதவியோடு மெட்ராஸ் வரும் ஒரு ஏழை இளைஞன், பின்னாளில் பெரிய நடிகனாக வளர்ந்து தனது குடும்பத்தை எப்படிக் காப்பாற்றுகிறான் என்பதே இப்படத்தின் சுவாரஸ்யமான கதைக் களம் ஆகும். கிராமத்து வாழ்க்கை, நகரத்து சூழல், ஏழை இளைஞனின் வளர்ச்சி என அனைத்தையும் மிக நேர்த்தியாக பாக்யராஜ் இதில் கையாண்டிருந்தார்.
இளையராஜாவின் இசையில் உருவான ‘ஒரு நாயகன் உதயமாகிறான்…’ போன்ற காலத்தால் அழியாத பாடல்களைக் கொண்ட இத்திரைப்படம், ஒட்டுமொத்தமாக ரூ. 1.25 கோடி வரை வசூல் செய்து அன்றைய காலகட்டத்தில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியது. வசூலிலும் சரி, உள்ளடக்கத்திலும் சரி, தமிழ் சினிமாவின் மிக முக்கிய கிளாசிக் திரைப்படமாக விளங்கும் ‘தாவணிக் கனவுகள்’ மற்றும் அதன் படைப்பாளி பாக்யராஜின் சாதனைகள் என்றும் தமிழ் நெஞ்சங்களில் அழியாமல் நிலைத்திருக்கும்.
